அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கிடைக்க இருந்த சிக்கல் விலகியது

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது. இதனால், அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கிடைக்க இருந்த சிக்கல் விலகியது.

இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.